இந்தியாவில் ஆடுகளுக்கும் முகக்கவசம்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்கள் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்ட கிராம மக்கள் தங்கள் கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக செய்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கொரோனா முதலாவது அலையில் நாடு தத்தளித்தபோது, முகக்கவசம், சமூக இடைவெளி என மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியதோடு, கொரோனா தடுப்பு என்ற பெயரில் சிலர் செய்த விசித்திரமான செயல்கள் அப்போது வைரலாகின.
சிலர் ஒரு அடி முன்னே போய், கொரோனாவிலிருந்து செல்லப் பிராணிகள் மற்றும் வளர்ப்பு விலங்குகளை பாதுகாப்பதற்காக அவற்றிற்கும் முகக்கவசம் அணிந்து விட்டது சமூக ஊடகங்களை ஹிட் அடித்த சம்பவங்கள் எல்லாம் நடந்தது உண்டு. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ள இந்த நேரத்தில், தற்போது இதேபோன்ற சம்பவங்கள் மீண்டும் அரங்கேறத் தொடங்கியுள்ளன.
மகாராஷ்டிராவின் மஹூர் தாலுக்காவில், விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளுக்கு முகக்கவசம் அணியச் செய்வதன் மூலம் அவர்களைக் காப்பாற்றி பாதுகாக்கின்றனர். ஆடுகளை காட்டை நோக்கி அழைத்துச் செல்லும்போது மட்டும் அவர்கள் முகக்கவசத்தை அகற்றிவிட்டு, மேய்ச்சலை முடித்து பின்னர் கிராமப் பகுதியை நோக்கி அழைத்துச் செல்லும்போது மீண்டும் முகத்தில் முகக்கவசம் போடுகிறார்கள்.
கொரோனாவிலிருந்து முழு பாதுகாப்பைப் பெற இது தங்கள் விலங்குகளுக்கு உதவும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
இது சிரிப்பை ஏற்படுத்தக் கூடிய விஷயம் தான் என்றாலும், மக்கள் தங்கள் கால்நடைகள் மீது கொண்டுள்ள கரிசனத்தைக் காட்டுவதாக பலர் இதை பாராட்டியும் வருகின்றனர்.