விமல் – பஸில் மோதல் உக்கிரம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் சில பங்காளிக்கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பஸில் ராஜபக்ச கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்துக்குள் இருந்துக்கொண்டு எதிரணியின் பணியை எவரும் முன்னெடுக்க முடியாது எனவும், அவ்வாறானவர்களை வெளியேற்றுவதைத்தவிர வேறு வழியில்லை என கடும் தொனியில் விமர்சித்தார் எனவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும், அக்கட்சியின் புதுமுக எம்.பிக்களுக்குமிடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
இதன்போதே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோரை இலக்கு வைத்து பஸில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதை தடுப்பதில் மேற்படி தலைவர்களே முன்னின்று செயற்பட்டனர். இவர்களுக்கு சார்பான தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் பஸில்மீது விமர்சனக் கணைகளைத் தொடுத்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.