மொட்டுக் கட்சிக்குள் மோதல் 12 கட்சிகள் அவசர சந்திப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்க கூட்டணிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கொழும்பு அரசியலில் களத்தில் அவசர சந்திப்புகளும் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் முறுகல் நிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் தேரர்கள் சிலர் இறங்கியுள்ளனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் குறித்து விமல்வீரவன்ஸ வெளியிட்ட கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. தமது கட்சி குறித்து கருத்து வெளியிடுவதற்கு விமலுக்கு அருகதையும் கிடையாது என பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அறிவிப்பு விடுத்ததுடன், விமல் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் சிலர் விமலை அரசாங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதற்கு விமலும் பதிலடி கொடுக்க பிரச்சினை உச்சம் தொட்டது.

இந்நிலையில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் 12 கட்சிகள் விமல்வீரவன்சவின் வீட்டில் நேற்று அவசர சந்திப்பொன்றை நடத்தின. இதன்போது அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் எனவும், கூட்டு பொறுப்புடனும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையின்போது ஒருமித்த குரலில் கருத்து வெளியிட வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அரச கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக இத்தகையதொரு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும், சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *