மாணவியின் மரணம் தொடர்பில்
ஆசிரியை கைது!

வளவை ஆற்றில் நீராட சென்ற கல்தொட்ட பகுதியை சேர்ந்த பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த ஆசிரியை பாடசாலையின் அதிபரிடமோ அல்லது வலய கல்விப் பணிப்பாளரிடமோ எவ்வித அனுமதியினையும் பெறாமல் குறித்த மாணவர்கள் இவ்வாறு வளவை கங்கைக்கு நீராட அழைத்துச் சென்றுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

பலாங்கொடை, கல்தொட்ட படகொட பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராடிக் கொண்டிருந்த மாணவ மாணவிகளில் ஒரு மாணவி நிரீல் மூழ்கி நேற்று முன்தினம் (30) உயிரிழந்தார்.

பலாங்கொடை, தென்ன பிரதேசத்தை சேர்ந்த நிரோஷிகா குமாரி என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் குறித்த மாணவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த மாணவி ஒருவர் அதனை கைப்பேசியில் காணொளி பதிவு செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *