நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்!

இரத்த அழுத்த மாறுபாடு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த், குணமடைந்து, மருத்துவ கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று இருந்த போது படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்த் தனிமைப்படுத்திக்கொண்டார்.
இந்நிலையில் திடீரென ரஜினிகாந்த் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரது உடலை பரிசோதித்த வைத்தியர்கள், சில நாட்கள் மருத்துவமனையிலேயே ஓய்வு எடுக்க அறிவுரை வழங்கினர்.

இதனை ஏற்று ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக வைத்தியசாலையிலேயே  சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவரை மருத்து கண்காணிப்பிலிருந்து விடுவிப்பது குறித்து அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகம் செய்தி குறிப்புகளை வெளியிட்டது.

அதில், ரஜினி உடல் நிலை தற்போது நன்றாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்த் ஒருவாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் எளிதான வேலைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று ஏற்படக்கூடிய சூழல்களை தவிர்க்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளை வைத்தியர்கள் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் இருந்து காரில் வெளியே வந்த ரஜினி, ரசிகர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *