இலங்கையில் கொரோனாவைத் தொடர்ந்து டெங்கு நோய் அபாயம்!

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் டெங்கு நோயும் தலைதூக்கினால் நாட்டில் சுகாதாரக் கட்டமைப்புக்கு அது பெரும் சவாலாக மாறிவிடும். எனவே, மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் டெங்குவை மறக்கவேண்டாம்.”  – என்று தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

இலங்கையில் 2019 இல் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 49 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டனர். எனினும், இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 28 ஆயிரத்து 944 பேரே டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே, கடந்தவருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயின் தாக்கம் குறைவடைந்துள்ளபோதிலும், அது மீண்டும் வேகமாக பரவக்கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர,

” மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கு நோய் மீண்டும் பரவக்கூடும். கொரோனா பிரச்சினைக்கு மத்தியில் டெங்கு நோயும் பரவ ஆரம்பித்தால் அது சுகாதார கட்டமைப்புக்கும், மக்களுக்கும் பெரும் சிக்கலாக அமைந்துவிடும்.

எனவே, சுற்றுசுழலை டெங்குநோய் பரவல் ஏற்படாத வகையில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு நோய் தொடர்பான அவதானம் மக்கள் மத்தியில் குறைந்துள்ளது. டெங்குவை மறக்கவேண்டாம். அவதானமாகவே இருங்கள். ” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *