கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் உரிமையாளர் கூறியுள்ள விடயம்!
கண்டி பூவெளிகட பகுதியில் நேற்று கட்டிடம் இடிந்து வீழ்ந்தமையை அடுத்து தாம் தலைமறைவானதாக வெளியான செய்தியை அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மறுத்துள்ளார்.
குறித்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த மற்றுமொருவரின் வீட்டில் தாம் தங்கியிருந்ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டிடத்தில் இருந்த ஒருவகை பயங்கரமான சத்தம் கேட்க ஆரம்பித்த உடனே வீட்டில் இருந்து தாம் வௌியேற ஆரம்பித்ததாக கூறினார்.
அத்துடன் வீட்டிற்கு வௌியில் வந்த உடனே கண்டி பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்து சம்பவம் தொடர்பில் முறையிட்டதாகவும் உரிமையாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, கண்டி – பூவெளிகட பகுதியில் நேற்று இடிந்து வீழ்ந்த கட்டிடம் இயற்கை அனர்த்தம் காரணமாக ஏற்படவில்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
குறித்த கட்டிடத்தின் அஸ்திவாரம், கட்டுமாணம் மற்றும் நிலத்தின் நிலையற்ற தன்மை காரணமாக அனர்த்தம் நேர்ந்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த கட்டிடம் பள்ளத்தாக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கண்டி – பூவெளிகட பகுதியில் நேற்று அதிகாலை குறித்த 5 மாடிக்கட்டிடம் இடிந்து அதன் அருகில் உள்ள வீடொன்றின் மீது வீழ்ந்து இந்த அனர்த்தம் நேர்ந்தது.
இந்த அனர்த்தத்தில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கியிருந்த நிலையில் அவர்களில் 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தனர்.
எனினும் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டிருந்ததுடன் அதன் பின்னர் குழந்தையின் தாயும், தந்தையும் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.