கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் 500% இணையவழிக் குற்றங்கள் அதிகரிப்பு!
இந்தியாவில் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் 500% அளவில் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
கேரள காவல்துறை மற்றும் சைபர் ஸ்பேஸ் மற்றும் தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கம் நடத்திய தரவு தனியுரிமை மற்றும் ஹேக்கிங் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இணையப் பாதுகாப்பு எனும் தலைப்பில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் கலந்து கொண்டு பேசினார்.
கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து நிதி மோசடிகள் அதிவேகமாக அதிகரித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
குறைந்த அளவிலான விழிப்புணர்வு மற்றும் இணையப் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இணையவழிக் குற்றங்களில் 500% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று டோவல் கூறினார்.
இணையக் கட்டணத் தளங்களில் பணத்தைக் கையாளுதல் தொடர்பாக அதிக அளவிலான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இணையத்தில் இருக்கும்போது பயனாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என எச்சரித்த அவர், இணையத்தைப் பயன்படுத்தும் போது ஒரு பொறுப்பான அணுகுமுறை இருக்க வேண்டும் என்றார்.