தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சர் கொரோனாவுக்குப் பலி!
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் கடுமையாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 17.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 37,364 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடுமையாகத் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் முதல்வர்கள், அமைச்சர்கள், காவலர்கள், மருத்துவர்கள் உட்பட பலரும் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், தற்போது உத்தரப் பிரதேச அமைச்சர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்தவர், கமல் ராணி வருன். 62 வயதான இவருக்கு சில நாள்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூலை 18-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 9.30 மணிக்கு சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் உயிரிழந்துள்ளார்.