இலங்கையைப் போன்று லண்டனிலும் தற்கொலை தாக்குதலுக்கு தயாரான பெண்!
லண்டன் நகரத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிட்ட சபீயா ஷயிக் என்ற பெண், இலங்கை குண்டுத்தாக்குதலின் முக்கியஸ்தரான சஹ்ரான் ஹஷீம் மற்றும் அப்துல் லதீப் மொஹமட் ஜமீல் என்பவருடன் தொடர்பு வைத்திருந்தார் என தெரியவந்துள்ளது.
தாஜ் சமுத்ராவுக்கு தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த அப்துல் லதீப் மொஹமட் ஜமீல் 2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் குறித்த பெண்ணை பிரித்தானியாவில் சந்தித்துள்ளார்.
கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலன்று இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் போன்று லண்டனில் உள்ள பிரபல தூய பவுல் தேவாலயத்திற்கும் பிரபல சுற்றுலா ஹோட்டல்களையும் இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில் 36 வயதுடைய சபீயா ஷயிக் என்ற இந்த பிரித்தானிய பெண்ணுக்கு ஆயுல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரது வாக்குமூலத்திற்கமைய, 2007ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தினை ஏற்றுக் கொண்டவர். இணையம் ஊடாக பயங்கரவாதம் தொடர்பில் அறிந்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் அபு வலீட், அல் முஹஜிரோன், என்ஜம் சவுத்ரி என்ற பயங்கரவாதிகளின் கொள்கைகளை கொண்டிருந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு தாக்குதல் மேற்கொள்ளவிருந்த அப்துல் லதீப் மொஹோமட் ஜமீல் 2006ஆம் ஆண்டு லண்டன் நகரத்தில் கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளும் போது இந்த பெண்ணுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் பிரதான பிரதிநிதியாக என்ஜம் சவுத்ரி பிரித்தானியாவில் செயற்பட்டுள்ளார். அவரது போதனைகளை சஹ்ரான் ஹஷீம் மற்றும் அவரது குடும்பத்தினர் கற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது.