கொரோனா நிலவரம் பொய்யில்லை மக்கள் விழித்திருக்க வேண்டும்!
கொரோனா நிலவரம் பொய்யில்லை; மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்!
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கொரோனா உலக அளவில் நேற்று வரை ஒரு கோடியே பத்து லட்சம் பேரைப் பாதித்து, ஐந்தே கால் லட்சம் பேரைப் பலி வாங்கியுள்ளது.
இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் அவசரப் பிரிவுத் தலைவரான டாக்டர்.மைக்கேல் ரேயான் செய்தியாளர்களை ஜெனீவாவில் சந்தித்தபோது பேசியவற்றிலிருந்து சில செய்திகள்:
“கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிற உலக நாடுகள் விழித்துக் கொள்ள வேண்டும். கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கொரோனா கள நிலவரமும், தரவுகளும் பொய்யில்லை. அமெரிக்கா மிகவும் பாதிப்படைந்த நாடாக இருக்கிறது. கொரோனா பாதிப்புகள், பலிகள் பற்றிய தரவுகளைக் கண்டுகொள்ளாமல் பல நாடுகள் புறக்கணிக்கின்றன.
இன்னும் காலம் கடந்துவிடவில்லை. பொருளாதார இழப்புகளிலிருந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்குப் பொருளாதாரக் காரணங்கள் நம்மிடம் இருக்கின்றன. அதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் கொரோனா தொற்றுப் பரவலைப் புறக்கணித்துவிட முடியாது. கொரோனா மாயமாகித் தொலைந்து போய் விடாது’’ என்றிருக்கிறார்.