முன்னாள் அமைச்சர் ரிஷாதை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை!
வில்பத்து தேசிய வன பகுதி காணி விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிர்வரும் 29ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இரண்டாவது தடவையாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அழைப்பாணை விடுத்துள்ளது.
வில்பத்து தேசிய வனத்தில் அதிபாதுகாப்பு பகுதிக்குட்பட்ட ஆயிரக்கணக்கான காணியை சட்டவிரோதமாக மீள்குடியேற்றத்திற்கும் சட்டபூர்வமற்ற நிர்மாணப் பணிகளுக்கும் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி சுற்றாடல் நீதி கேந்திர நிலையம் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. அதற்கிணங்கவே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 29ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி சுற்றாடல் நீதி கேந்திர நிலையம் தாக்கல்செய்துள்ள மனுவை ஜனக் த சில்வா மற்றும் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போதே மேற்படி அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது