2018 இல் 66 ஆயிரத்து 971 பெண் பணியாளர்கள் வெளிநாடு பயணம்!

கடந்த வருடம் (2018)  வௌிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச்  சென்ற பெண் பணியாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக,  இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப்  பணியகம் தெரிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் 68,319 பெண் பணியாளர்கள் வௌிநாடுகளுக்குச் சென்றுள்ளதுடன், அது 2018 ஆம் ஆண்டு 66,971 ஆகக்  குறைவடைந்துள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு 211,502 பேர் வௌிநாடுகளுக்கு  தொழிலுக்காகச்  சென்றுள்ளதுடன், அதில் 68.3 வீதமானோர் ஆண்கள் என்றும்,  வௌிநாட்டு வேலைவாய்ப்புப்  பணியகம் தெரிவித்துள்ளது.
 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது,  2018 ஆம் ஆண்டில் வௌிநாடுகளுக்கு தொழிலுக்காகச்  சென்ற ஆண்களின்  தொகை அதிகரித்திருப்பதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் இலங்கைத் தொழிலாளர்கள் அதிகளவில் கட்டார் நாட்டுக்குச் சென்றுள்ளதுடன், குவைட், சவூதி அரேபியா, தென் கொரியா போன்ற நாடுகளுக்கும் அதிகளவில் சென்றுள்ளனர்.
இதேவேளை,  மத்திய கிழக்கு நாடுகளை விட ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளுக்கு இலங்கைத் தொழிலாளர்கள் செல்வதில் ஆர்வம் செலுத்துவதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும், இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *