தனியார்துறை ஊழியர்களிடமிருந்து 15000 முறைப்பாடுகள்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 மாதங்களில் தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் 15,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான பூரண அறிக்கை ஒன்றை தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாக தொழில் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பணியாளர்களை பணியிலிருந்து நிறுத்தியமை, மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படாமை, மாதாந்த கொடுப்பனவில் ஒரு பகுதி மட்டும் வழங்கப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிறுவனங்களின் தலைவர்களை வரவழைத்து, நேரடியாக கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலின் பின்னர் முறைப்பாடுகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தொழில் திணைக்களத்தின் பேச்சாளர் கூறினார்.