தமிழ் ஊடகவியலாளரின் குடும்பத்துக்கு உயிர் அச்சுறுத்தல்!

ஊடகவியலாளர் இராமலிங்கம் தில்லைநாயகத்தின் குடும்பத்துக்கு உயிர் அச்சுறுத்தல் பாணியிலான மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகின்றன.

ஊடகவியலாளர் தில்லைநாயகம் இலங்கையில் இருந்து ஊடகப் பணியைச் செய்து வந்த நிலையில், உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகின்றார். அவர் அங்கிருந்து கொண்டும் தனது ஊடகப் பணியை மேற்கொண்டு வருகின்றார்.

இந்தநிலையிலேயே இலங்கையிலுள்ள அவரது குடும்பத்தினர், இராணுவப் புலனாய்வாளர்களால் பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நேற்று மாலை வேளையில் கல்முனையிலுள்ள ஊடகவியலாளர் தில்லைநாயகத்தின் வீட்டுக்குச் சென்ற இராணுவப் புலனாய்வாளர்கள், அவர் பற்றிய தற்போதைய தகவல்களைக் கேட்டிருக்கின்றார்கள்.

இதற்கு முன்னரும் பல தடவைகள் அவரது வீட்டுக்குச் சென்ற இராணுவப் புலனாய்வாளர்கள், அவரது குடும்பத்துக்கு உயிர் அச்சுறுத்தல் பாணியிலான மிரட்டல்களைத் தொடர்ந்து விடுத்திருந்தனர்.

அந்த மிரட்டல்கள் தொடர்பாகக் கல்முனை பொலிஸ் நிலையத்தில் தில்லைநாயகத்தின் குடும்பத்தினரால் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் நேற்று அவரின் வீட்டுக்குச் சென்றிருந்த இராணுவப் புலனாய்வாளர்கள் அவர் தொடர்பான தகவல்களைத் துருவியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *