கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நூறு மீட்டர் தொலைவில் இருந்தே கண்டறியும் ஸ்மார்ட் கருவி கண்டுபிடிப்பு

கொரோனா பாதிப்பை 100 மீட்டர் தொலைவில் இருந்தே கண்டறியும் ஸ்மார்ட் கருவியை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது.கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். ஈரானில் இதுவரை 77,995 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,869 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 100 மீட்டர் தொலைவிற்குள் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் 5 நொடிகளில் கண்டறிய முடியும் ஸ்மார்ட் கருவியை ஈரான் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரத்தப் பரிசோதனையின்றி நோயாளிகளை விரைவாகக் கண்டறிய முடிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் கருவியின் ஆண்டெனா காட்டும் திசையில் 100 மீட்டர் தொலைவிற்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதி இருந்தால் அதனையும் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கிருமி நாசினி  தெளிக்கப்பட வேண்டிய பகுதிகள் கண்டறியப்பட்டு சுகாதாரத்துறை தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக கூறுகின்றனர்.

இந்த ஸ்மார்ட் கருவியை ஈரானின் புரட்சிகர படைப்பிரிவின் தளபதி ஹுசைன் சலாமி அறிமுகப்படுத்தி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு வழங்கினார். அறிமுக விழாவில் பேசிய அவர், இந்த கருவியில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க உதவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த கருவி மூலம் 5 விநாடிகளில் 100 மீட்டர் தொலைவுக்கு ஒரு காந்தபுலம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் எனக் கூறினார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *