இலங்கையில் இம்மாத இறுதிக்குள் ஊரடங்கு நீக்கப்படும்
ஊரடங்கு சட்டம் இம்மாதத்துக்குள் நீக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க இன்று (12) தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” தற்போதைய சூழ்நிலையில் இம்மாதத்துக்குள் ஊரடங்கு சட்டத்தை நீக்கக்கூடியதாக இருக்கும். அவ்வாறு நீக்கப்பட்டாலும் சமூக இடைவெளியை பேணுதல் உட்பட சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுவதற்கான வேலைத்திட்டமொன்று உருவாக்கப்படவேண்டும்.
குறிப்பாக ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதும் தொழிலுக்கு செல்பவர்கள், பஸ்களில் அதிக சன நெரிசலுடன் பயணித்தால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களெல்லாம் பயன் அற்று போய்விடும்.
இலங்கையில் தேவையான அளவைவிடவும் கூடுதல் பஸ்கள் இருக்கின்றன. எனினும், லாபத்தை கருத்திற்கொண்டு, எல்லா பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்துவதில்லை. அந்நிலைமை மாறவேண்டும். பயணிகள் சுகாதாரத்துடனும், சுதந்திரமாகவும் பயணிக்ககூடிய நிலை உருவாக்கப்படவேண்டும்.
அதேவேளை, மலரும் புத்தாண்டில் வீட்டில் இருந்தவாறே சுபநேரம் உட்பட சடங்குகளை கடைபிடிக்கவும். அதற்கு தடை இல்லை. ஆனால், உறவினர்களின் வீடுகளுக்கு செல்வது, பரிசுகளை வழங்குவதற்கு வெளியில் செல்வது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாது.” – என்றார்