ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதில் பிரதான கட்சிகள் தீவிரம்! – ஒக். 15 இல் வெளியாகின்றது கோட்டா அணியின் அறிக்கை
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் வெளியாகவுள்ளது.
தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிப்பதற்காக பிரதான கட்சிகளில் குழுக்களை அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான பூர்வாங்கப் பணிகளும் ஆரம்பமாகியுள்ளன.
இதன்படி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுகளை நடத்தி வந்தாலும் மறுபுறத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும் பணியில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உயர்மட்டக் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியில் இணைந்தாலும் அல்லது இணையாவிட்டாலும்கூட ஒக்டோபர் 15ஆம் திகதி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்கு கோட்டாபய தரப்பு தீர்மானித்துள்ளது. இதற்கான நிகழ்வு கொழும்பில் இடம்பெறவுள்ளது.
ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியும் ஒக்டோபர் நடுப்பகுதியில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்கு உத்தேசித்துள்ளது. மக்களிடம் கருத்துக் கோருவதற்காகக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி உடன்படிக்கை கைச்சாத்திட்ட பின்னரே தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பை அக்கட்சி விடுக்கும் என்றும், ஏனைய கட்சிகளும் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்து வருகின்றன.