ஜனாதிபதி முறைமை ஒழிப்புக்கு எதிராக சஜித் ஆதரவு அமைச்சர்கள் போர்க்கொடி! – அலரிமாளிகையில் ரணிலுடன் மங்கள கடும் வாக்குவாதம்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் அவசர அவசரமாக எடுத்துவரும் முயற்சிகளுக்கு சஜித் ஆதரவு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னர் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூட்டமொன்று நடந்தது.
இதில் கலந்துகொண்ட சஜித் ஆதரவு அமைச்சர்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு முயற்சிக்குக் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்யும் எந்தவொரு முயற்சிகளும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே செய்யப்பட வேண்டும் என பிரதமரிடம் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வளவு காலமும் இதனைச் செய்யாமல் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு செய்வது மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் பிரதமரிடம் அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.
அமைச்சர் மங்களவுக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையில் இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன.