சவேந்திரவுக்கு எதிராக கனடாவும் போர்க்கொடி!
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக நம்பகத்தன்மை மிக்க மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன என்று கனடா தெரிவித்துள்ளது.
சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து இலங்கைக்கான கனேடியத் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“இறுதிப்போரில் பல மனித உரிமை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட லெப். ஜெனரல் சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.
அவரது நியமனம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளைக் குறைமதிப்புக்கு உட்படுத்துகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப்போரில், இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவுக்கு சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார். அவரது படைப்பிரிவு, சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது” – என்றுள்ளது.