கோட்டாவே ஜனாதிபதி வேட்பாளர்! – மஹிந்த அறிவிப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவே களமிறங்குவார் என முன்னணியின் புதிய தலைவரான மஹிந்த ராஜபக்ச இன்று அறிவித்தார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
மஹிந்த, சரியாக இன்று மாலை 4 மணியளவில், கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார்.
அவர் கோட்டாவின் பெயரை உச்சரித்ததுமே, திடீரென மாநாட்டில் பங்கேற்றிருந்தவர்கள் பெரும் கரகோசம் எழுப்பி, கோட்டாவின் படங்களை உயர்த்திப் பிடித்தனர்.
அதன்பின்னர் கோட்டாவை வரவேற்கும் பாடல் ஒலிக்கவிடப்பட்டது. அதன்போது கோட்டா மேடையில் மஹிந்தவுடன் காட்சியளித்தார்.
அதேவேளை, கோட்டாவின் பெயர் அறிவிக்கப்பட்டதும் நாட்டில் பல பகுதிகளிலும் பட்டாசு கொளுத்தி மஹிந்தவின் சகாக்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.