ஐ.தே.கவின் வேட்பாளராக சஜித் களமிறங்கமாட்டார்! – ரவி திட்டவட்டம்

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடமாட்டார். கட்சியின் மத்திய செயற்குழு அவருக்கு அனுமதி வழங்கவே இல்லை. எமது வேட்பாளர் யார் என்று விரைவில் அறிவிக்கப்படும்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் தலைமைத்துவத்தைத் தான் ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ அம்பாந்தோட்டையில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தனிநபரின் சில்லறைத்தன விளையாட்டுக்கள் எல்லாம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எடுபடாது. இக்கட்சி குடும்ப ஆட்சிக்கு ஒருபோதும் இடமளிக்காது. கட்சியின் மத்திய செயற்குழுவில் பெரும்பான்மைப்பலம் இல்லாமல் ஓரிரு ஆதரவாளர்களை மட்டும் கொண்டுள்ளவர்கள் ஜனாதிபதிக் கதிரையில் அமர்வதற்குக் கனவு காணக்கூடாது.

உள்நாட்டையும் வெளிநாட்டையும் அரசியல் சாணக்கியத்தால் சமாளிக்கக்கூடிய ஒருவரைத்தான் ஜனாதிபதி வேட்பாளராக எமது கட்சி களமிறக்கும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *