ரஞ்சனுக்கு வலுக்கின்றது எதிர்ப்பு! – நாளை ரணிலிடம் நேரில் விளக்கம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாளை நேரில் சந்தித்து – சர்ச்சையை ஏற்படுத்திய அறிவிப்பு தொடர்பில் விளக்கமளிப்பேன் என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சமூகவலைத்தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது தெரிவித்த சில கருத்துக்கள் தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

மகாநாயக்க தேரர்களையும், பௌத்த துறவிகளையும் அவமதிக்கும் வகையில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார் என்று பொது எதிரணி உட்பட அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டி வருகின்றன.

அத்துடன், சிங்கள், பௌத்த மக்களிடம் அவர் மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு விளக்கமளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் ஊடாக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அறிவிப்பு விடுத்திருந்தார்.

இந்தநிலையிலேயே பிரதமரை நாளை புதன்கிழமை நேரில் சந்தித்து விளக்கமளிக்கவுள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், தான் மகாநாயக்க தேரர்களை அவமதிக்கும் வகையில் செயற்படவில்லை என்றும், அரசியல் எதிரிகளால் திட்டமிட்ட அடிப்படையில் கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *