பூஜித, ஹேமசிறிக்கு நாளைவரை மறியல்!
குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் நாளை புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஹேமசிறி பெர்னாண்டோவும், பொலிஸ் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த பூஜித ஜயசுந்தரவும் இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டனர்.
இந்தநிலையில், இன்று மாலை குறித்த இரு வைத்தியசாலைகளுக்கும் சென்ற கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன மேற்படி இருவரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து குறித்த இருவரும் அந்தந்த வைத்தியசாலைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதியன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் உத்தரவுக்கிணங்க இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.