2005 தேர்தலில் இழைத்த தவறை மீண்டும் தமிழர் செய்யக்கூடாது! – யாழில் கூறினார் விஜயகலா

வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இழைத்த தவறை இனிவரும் தேர்தல்களிலும் இழைக்கக்கூடாது எனக் கேட்டுள்ளார் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்.

யாழ். முற்றவெளியில் நேற்று நடைபெற்ற சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டில் உள்நாட்டுப் போரில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதத் தாக்குதல் வரை தமிழ் மக்களே கொல்லப்பட்டு வருகின்றனர். இலங்கையில் எத்தனையோ சமூகம் வாழ்கின்ற போதிலும் இன்றுவரை தமிழர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாட்டில் இடம்பெற்ற போரினால் தமிழர்கள் உடைமைகளை இழந்தனர். அதற்கு மேலாகப் பல உறவுகளை இழந்து உள்ளனர்.

நாம் கட்சிக்கு ஒரு தலைவர் வேண்டும் என்பதுடன் நாட்டுக்கு ஒரு தேசியத் தலைவர் உருவாக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். தமிழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது சில நிர்ப்பந்தத்தால் வாக்களிக்காது விட்டனர். இதனால் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவைச் சந்தித்தது.

இதனால் நாட்டில் உள்நாட்டுப் போர் உக்கிரம் அடைந்தது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இதே வரலாற்றுத் தவறை இனியும் தமிழ் மக்கள் செய்யக்கூடாது.

எனவே, இனிவரும் தேர்தலில் சரியான தெரிவை மேற்கொண்டு முழு நாட்டுக்குமான தேசியத் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்யவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *