தீர்வு முயற்சியில் இருந்து விலகிவிடவில்லை அரசு! – யாழில் ரணில் உறுதிபடத் தெரிவிப்பு
“இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலிருந்து நாங்கள் விலகவில்லை. அந்தப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.”
– இவ்வாறு யாழ்பாணம் முற்றவெளி மைதானத்தில் வைத்துத் தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற சமுர்த்தி உதவி வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசு பெரும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றது. நாம் வடக்கில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். நாம் பதவியேற்ற பின்னா் போரால் முற்றாக அழிந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதற்கு இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆதரவு வழங்கிவருகின்றனா்.
வடக்கில் 10 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தை தலா 10 இலட்சம் ரூபா செலவில் ஆரம்பிக்கின்றோம். தற்போது 4800 வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 5200 வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கிழக்கிலும் 10 ஆயிரம் வீட்டுதிட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.
இந்த நாட்டில் இனவாதம் இல்லையென்றால் நாம் பல அபிவிருத்திகளைச் செய்திருப்போம். தமிழ் மக்கள் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாகத் திருப்தியடையவேண்டும். விசேடமாக நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்கவேண்டும்” – என்றார்.