முடிவுக்கு வந்தது ரத்தன தேரரின் உண்ணாவிரதம்!
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி கடந்த நான்கு நாட்களாக முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று பிற்பகலுடன் நிறைவு செய்தார் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர்.
அஸாத் ஸாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தங்கள் ஆளுநர் பதவிகளை இராஜிநாமா செய்த தகவலை எடுத்துக்கொண்டு மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அத்துரலிய ரத்தன தேரரை இன்று பிற்பகல் சந்தித்தார்.
“ஜனாதிபதி என்னைத் தொடர்புகொண்டு ஆளுநர்கள் இருவரும் பதவி விலகிய தகவலை உங்களிடம் கூறச் சொன்னார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் பிரதமருடனான சந்திப்பையடுத்து இன்று மாலை பதவியை இராஜிநாமா செய்யவுள்ளார் எனவும் ஜனாதிபதி உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்” என்று அத்துரலிய ரத்தன தேரரிடம் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.
ஜனாதிபதியின் தகவலை எழுத்து மூலம் தனக்கு வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநரிடம் அத்துரலிய ரத்தன தேரர் கேட்டார். உடனே எழுத்து மூலம் அவர் வழங்கினார்.
அதையடுத்து உண்ணவிரதத்தை அத்துரலிய ரத்தன தேரர் நிறைவு செய்தார். அவர், கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.