மூன்று வாகனங்கள் மோதியதில் 3 பெண்கள் சம்பவ இடத்தில் பலி! – மேலும் மூவர் படுகாயம்
வெல்லவாய, தனமல்வில வீதியின் குடாஓயா இராணுவப் பயிற்சி முகாமுக்கு அருகில், இரு ஓட்டோக்களும் கென்டர் ரக லொறியொன்றும் மோதிக்கொண்டதில் ஓட்டோவில் பயணித்த மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குடாஓயாவிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஓட்டோ ஒன்று, தனமல்விலயிலிருந்து வெல்லவாய நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மற்றுமோர் ஓட்டோவுடன் மோதியுள்ளது. இந்தநிலையில், குறித்த ஓட்டோவுக்குப் பின்னால், மிக வேகமாக வந்துகொண்டிருந்த கென்டர் ரக லொறி, மேற்படி இரு ஓட்டோக்களுடன் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்த குடாஓயாப் பொலிஸார், தப்பியோடிய கென்டர் ரக லொறியின் சாரதியைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறினர்.