இந்தியத் தேர்தலில் மோடியின் கூட்டணி மாபெரும் வெற்றி! – மீண்டும் தோற்றது காங்கிரஸ்; தமிழகத்தில் தி.மு.கவின் அலை
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கூட்டணி முன்னிலை வகிக்கின்றது. 344 தொகுதிகளை இந்தக் கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதேவேளை, தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கின்றது.
இந்தியா முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி தொடங்கி, இம்மாதம் 19ஆம் திகதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் இரத்துச் செய்யப்பட்டது.
இந்தத் தேர்தலை பாரதீய ஜனதாக் கூட்டணி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், காங்கிரஸ் கூட்டணி அதன் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலும் சந்தித்தன.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடந்தது. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
பாரதீய ஜனதாக் கூட்டணி 344 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. காங்கிரஸ் கூட்டணி 94 தொகுதிகளை மட்டும் கைப்பற்றியுள்ளது. ஏனைய 104 தொகுதிகளை மற்றைய கட்சிகள் கைப்பற்றியுள்ள. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. அ.தி.மு.க. ஒரு தொகுதியை மட்டும் கைப்பற்றியுள்ளது.