இந்தியாவில் தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு; நாளைமறுதினம் கடைசிக் கட்ட வாக்களிப்பு! – 23ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை

இந்தியாவில் நாடாளுமன்றத்துக்கான கடைசிக் கட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கின்றது. மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான பரப்புரைகளே இன்றுடன் நிறைவடைகின்றன.

மக்களவைக்கு 7 கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.

கடைசி கட்டத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9, பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் 8, ஜார்க்கண்டில் 3, இமாச்சல் பிரதேசத்தில் 4, சண்டிகர் என 59 தொகுதிகளுக்கு நாளைமறுதினம் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகின்றது.

கடைசிக் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்வதால் வாக்கு சேகரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட மோதலால் உடன் பிரசாரத்தை முடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் 15 நாட்களாக நடைபெற்று வரும் பிரசாரமும் இன்றுடன் நிறைவடைகின்றது.

இதனால் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அத்தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதிலும் வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *