இலங்கை நிலைவரம் – புருவத்தை உயர்த்தும் உலக நாடுகள்!
இலங்கையின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
நாட்டில் இன்று காலை அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
“கொழும்பிலும் மட்டக்களப்பிலும் பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. இலங்கையின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறது.” என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
உதவிகள் மற்றும் விளக்கங்கள் தேவைப்படும், இந்தியக் குடிமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்களையும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
அதேவேளை ,இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து தாம் கொழும்பில் உள்ள இந்திய தூதுவருடன் தொடர்பில் இருப்பதாகவும் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதேவேளை, கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களும் நிலைவரம் குறித்து கவனம் செலுத்தி வருகின்றன.
பாதுகாப்பு தரப்பினரால் விடுக்கப்படும் அறிவுறுத்தலின்படி செயற்படுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.