ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்! – மீண்டும் அறிவிப்பு விடுத்தார் பொன்சேகா
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேக்கா தெரிவித்தார்.
களனியில் நேற்று மாலை ( 26) நடைபெற்ற நிகழ்வொன்றின்றின் பின்னர், ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்தும், தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பிலும் சரத்பொன்சேக்காவிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.
இவற்றுக்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,
” ஐ.தே.கவின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே செயற்பட்டுவருகிறார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அவரே களமிறங்கவேண்டும். பிரதமர் ரணிலை நிச்சயம் நாம் வெற்றிபெறவைப்போம்.
அதேவேளை, தேசிய அரசு உதயமாவதற்கு நான் எதிர்ப்பை வெளியிடவில்லை. ஆனால், காலைவாரிய தரப்பினருடன் மீண்டும் இணையக்கூடாது. இரவில் விழுந்த குழியில், பகலில் விழக்கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடாகும்.” என்றார்.