‘தல்செவன’ இராணுவ விடுதிக்கு காணி சுவீகரிக்க அனுமதியோம்! – மைத்திரியுடன் பேசுவோம் என்கிறார் மாவை
காங்கேசன்துறை ‘தல்செவன’ இராணுவ விடுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலம் இராணுவத்தால் சுவீகரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் பேச்சு நடத்த ஜனாதிபதியை அடுத்த வாரம் தாம் சந்திக்கவுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“காங்கேசன்துறை ‘தல்செவன’ இராணுவ விடுதியை மையமாகக் கொண்டு அந்த விடுதியைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலம் இராணுவ நிர்வாகத்தின் சுற்றுலாப் பயன்பாட்டுக்காகச் சுவீகரிக்கப்படும் நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
சுவீகரிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு ஜனாதிபதி, பிரதமர், காணி அமைச்சுடன் பேச்சு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” – என்றார்.