பிரமுகர் கொலை சூழ்ச்சி: நாலக்க சில்வாவுக்கு மறியல் நீடிப்பு! – ஐ.ஜி.பிக்கும் நெருக்கடி
பிரமுகர் கொலைசூழ்ச்சியுடன் தொடர்புபட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்லா எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தியதை அடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாலக்க டி சில்வாவிற்கு எதிரான குற்றப்பத்திரத்தை தயாரிப்பதற்கு தேவையான சாட்சியங்கள் அடங்கிய அறிக்கை இன்று நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பாரிய கொலைக்குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பிரிவின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ரஞ்சித் முனசிங்கவால் குறித்த அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அதேவேளை, பிரமுகர் கொலை சூழ்ச்சி குறித்து ஆராயப்பட்ட ஒலி நாடாவொன்றில் உள்ள குரல் தற்போதைய பொலிஸ் மா அதிபரின் குரலென விசாரணைகளில் தெரியவந்துள்ளது என சி.ஐ.டியினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.