தீர்மான வரைவில் திருத்தம் கூடாது! – 24 உறுப்பு நாடுகளிடம் கூட்டமைப்பு கோரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில் எத்தகைய திருத்தங்களையும் அனுமதிக்கக்கூடாது என்று தீர்மான வரைவுக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ள 24 நாடுகளின் பிரதிநிதிகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதி அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை பொறுப்புக்கூறல் பொறிமுறையைக் கால அட்டவணையுடன் கூடிய வகையில் முன்னெடுக்கும் வகையில் சர்வதேச அழுத்தம் பிரயோகிக்கப்படவேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

ஜெனிவாவுக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதி அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல் ஆகியோர் நேற்று திங்கட்கிழமை ஜெனிவா வளாகத்தில் பிரிட்டன் தலைமையிலான இலங்கைப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ள 24 நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதி சுரேன் சுரேந்திரனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார். இதன்போதே மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது குறித்து சுமந்திரன் எம்.பி. தெரிவிக்கையில்,

“நேற்றுக் காலை உறுப்பு நாடுகளுடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. பலர் வந்திருந்தனர். தீர்மான வரைவு பலப்படுத்தப்படவேண்டும் என்றும், கால அட்டவணை ஒன்று இணைக்கப்படவேண்டும் என்றும் நாம் கேட்டோம்.

இலங்கை இணை அனுசரணை வழங்கவேண்டும் என்றும், அதிலிருந்து இலங்கையை விலகவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினோம். இதையே நேற்று நண்பகலில் சந்தித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினரிடமும் கூறியிருக்கின்றோம். ஏற்கனவே வெளியிடப்பட்ட தீர்மான வரைவை இலங்கை மீறாமல் பார்த்துக்கொள்வது தமது கடமை என்று உறுப்பு நாடுகள் வாக்குறுதி அளித்தன” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *