சிகரெட் பாவனையை ஊக்குவிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!
சிகரெட், மதுபானம் போன்றவற்றின் பிரச்சாரங்களுக்கு ஊக்கமளிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பிலான தேசிய அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் பாலித்த அபயக்கோன் தெரிவித்தார்.
இவ்வாறான சில நாடகங்களும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட மா அதிபரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஆலோசனைக்கு அமைய இவ்வாறான நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிகரெட், மதுபானப் பாவனைகளை ஒழிப்பது தொடர்பிலான செயலமர்வின்போதே, பேராசிரியர் பாலித்த அபயக்கோன் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பிலான தேசிய அதிகார சபை 2011 ஆம் ஆண்டில் அறிமுகம்செய்த சட்டத்தினால் மதுபானங்களுக்கும், சிகரெட்டுக்களுக்கும் அடிமையானவர்களின் எண்ணிக்கை, தற்சமயம் 15 சத வீதம் வரை குறைவடைந்திருக்கிறது.
எனினும், 85 சதவீதமானோரை இதிலிருந்து மீட்கமுடிந்திருப்பதாகவும் பேராசிரியர் பாலித்த அபயக்கோன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கலையை ஊடகமாகப் பயன்படுத்தி சிகரெட், மதுபானம் போன்ற பாவனைகளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க, அனைத்து பெற்றோர்களும் முன் வரவேண்டும்.
இவ்வாறு, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய டொக்டர் உப்பில் ஜயசேகர வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
( ஐ. ஏ. காதிர் கான் )