’20’ இற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு! மு.காவும் போர்க்கொடி!!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் இன்று (01) தெரிவித்தார்.
ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
” தனிநபர்களின் தேவை, விருப்பங்களுக்கமைய ஜனாதிபதி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியாது.
நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியமாகும். எனவே, அந்த முறைமை தொடர்ந்தும் நீடிக்கவேண்டும்.
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் பங்காளிக்கட்சிகளாக இருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகியன,
மக்களால் தெரிவுசெய்யப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீடிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றன.” என்றார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்ககோரி ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.