மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு எதிராக அரசியல் போர் ! பதுங்கிபாய தயாராகும் சந்திரிக்கா!
தேசிய மட்டத்திலான தேர்தலொன்றுவரும்வரை அமைதிகாக்குமாறு தமது சகாக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார்.
அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெளிப்படையாக விமர்சிக்க வேண்டாம் என்றும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறவாடி – அரசியல் கூட்டணி அமைப்பதானது சந்திரிக்காவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கைப்பற்றும் முயற்சியில் அவர் இறங்கினார். அவருக்கு ஆதரவாக கட்சியின் மூத்த உறுப்பினர்கள்சிலர் நேசக்கரம் நீட்டினர்.
துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் மறைமுகமாக ஆதரவு வழங்கினர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சந்திரிக்கா பக்கமுள்ள எம்.பிக்களை தம்பக்கம் வளைத்துப்போட்டு தேசிய அரசமைக்கும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கியது. தேசியப் பட்டியல் ஊடாக சந்திரிக்காவுக்கு எம்.பி. பதவி வழங்குவதற்கும் பச்சைக்கொடி காட்டியிருந்தது.
சந்திரிக்காவின் சகாக்கள், ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தி, ஜனாதிபதியின் செயற்பாடுகளையும் சரமாரியாக விமர்சித்திருந்தனர்.
எனினும், தற்போது சகாக்களை பின்வாங்குமாறு சந்திரிக்கா பணிப்பு விடுத்துள்ளதால் அது தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் வெளியாகிவருகின்றன.
‘’ தேர்தலொன்று இல்லாத காலப்பகுதியில் மைத்திரி – மஹிந்த கூட்டணிக்கு எதிராக அரசியல் போர் தொடுப்பதானது பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடமுடியாது. இப்போதே எல்லாத அஸ்திரங்களையும் ஏவிவிட்டால் இறுதியில் தாக்குதல் நடத்துவதற்கு ஒன்றும் இருக்காது.
எனவே, தேசிய மட்டத்திலான தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரும்வரை காத்திருந்து, தாக்குதல் நடத்துவதற்கு அம்மையார் திட்டம் வகுக்கிறார்’’ என்று சந்திரிக்காவின் தீவிர ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.