ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியின் சமையல் அறைக்கு ‘சீல்’!
அசுத்தம் காரணமாக, பத்தனை ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியின் சமையல் அறை இன்று (05) ‘சீல்’ வைக்கப்பட்டது.
கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச சபையின் தலைவர் ஆகியோரின் பணிப்புரைக்கமையவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தரராகவன் தெரிவித்தார்.
சுமார் 450 ஆசிரியர் பயிலுநர்களுக்கு தேவையான உணவுகள் குறித்த சமையல் அறையிலிருந்தே சமைத்து வழங்கப்படுகின்றன.
எனினும், இந்த சமையல் அறை அசுத்தமாக காணப்படுவதாலும், உரிய பராமரிப்பு இன்மையாலும், ஆசிரியர் பயிலுநர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர். இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய இன்று மாலை சமையல் அறை சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கல்லூரியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 100ற்கும் மேற்பட்ட பயிலுநர் ஆசிரியர்கள் உணவு விசமானதில் நோய்வாய்ப்பட்டு கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
க.கிசாந்தன்