மாகாண சபைத் தேர்தல்: கூடி ஆராய்கிறது ஐ.தே.க.
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் இவ்வாரம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின்படி ஒன்பது மாகாண சபைகளுக்கான தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்துவதாக இருந்தால் ஊவா மாகாண சபை அதன் ஆயுள்காலம் நிறைவடைவதற்கு முன்னரே கலைக்கப்படவேண்டும்.
அத்தோடு தேர்தல்கள் பழைய முறைமையில் நடத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது ஆலோசனையில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறெனில் புதிய தேர்தல் முறைமையில் நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களது ஒத்துழைப்புடனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
எனவேதான் இது தொடர்பில் இவ்வாரம் விசேட கலந்துரையாடலொன்றுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்” – என்று குறிப்பிட்டுள்ளார்.