சாத்தப்பட்டது சபரிமலை ஐயப்பன் கோயில்! – தற்காலிகமாக முடிவுக்கு வருகின்றது போராட்டம்

சபரிமலையில் ஐயப்பன் கோயில் மகரவிளக்கு, மண்டல பூஜை முடிந்ததை அடுத்து கோயில் நடை சாத்தப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு, மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி திறக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் 10 – 50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் சபரிமலை கோயிலுக்கு வந்ததால் இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்களும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சமீபத்தில் கனகதுர்கா, பிந்து என்ற 2 பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். இதைத்தொடர்ந்து கேரளாவில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதற்கிடையே கேரள அரசு இந்த மண்டல பூஜை காலத்தில் இதுவரை 51 பெண்கள் கோயிலுக்கு வந்ததாக உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இந்தத் தகவலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், மகரவிளக்கு, மண்டல பூஜை முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சில பூஜைகளுக்கு பின்னர் கோயில் நடை சாத்தப்பட்டது.

மீண்டும் மாத பூஜைக்காக பெப்ரவரி 12ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக ஐயப்ப பக்தர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *