குடு மாபியாக்களின் கேந்திர நிலையமாக இலங்கை! விசாரணை வேட்டைக்காக கொழும்பு விரைகிறது பங்களாதேஷ் பொலிஸ்!

தெஹிவளையில் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாரிய தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பங்களாதேஷின் சிரேஷ்ட பொலிஸ் குழுவினர் நாளை (16) கொழும்பு வரவுள்ளனர்.

இது தொடர்பில் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணை கைது செய்யும் வகையில், சர்வதேசத்தின் ஒத்துழைப்பைப் பெறும் நோக்கிலேயே குறித்த பொலிஸ் குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

சார்க் நாடுகளில் போதைப்பொருள் குற்றங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களும் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே குறித்த குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

278 கிலோகிராம் ஹெரோயினுடன் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கடந்த மாதம் 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

3000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகப் பெறுமதி வாய்ந்த குறித்த ஹெரோயின் தொகையானது கடந்த வருடத்தில் கைப்பற்றப்பட்ட அதிகூடிய ஹெரோயின் தொகையாகும்.

சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண் பங்களாதேஷில் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளதென பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *