ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாண சபைத் தேர்தல்! – தயாராகுமாறு மைத்திரி வேண்டுகோள்
ஜனாதிபதி தேர்தல் பற்றி பல்வேறு கருத்துக்களை உருவாக்கி நடைபெற வேண்டியுள்ள மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கு சிலர் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தற்போது 06 மாகாண சபைகளின் நடவடிக்கைகள் செயலிழந்த நிலையில் உள்ளன என்றும், இது ஜனநாயகத்திற்கு ஒருபோதும் நல்லதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, ஜனாதிபதித் தேர்தல் பற்றி பேசுகின்றவர்கள் அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்று ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.
இது பற்றி தேர்தல்கள் ஆணையாளருடன் தான் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து மாகாண மட்டத்திலான கட்சியின் அமைப்பாளர்களை அழைத்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடல் நடத்தி வருகின்றார். அந்தத் தொடரில் ஊவா மற்றும் மத்திய மாகாண அமைப்பாளர்களுடனான சந்திப்பு இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.