பல்வேறு விபத்துகளில் 5 பேர் பரிதாப மரணம்!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளனர்.
ஹொரண, வெலிபென்ன, மினுவங்கொட, வீரபுகெதர மற்றும் முத்ததெட்டுகல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளிலேயே ஐவரும் உயிரிழந்துள்ளனர்.
ஹொரண – கொழும்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வான் ஒன்றுடன் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
33 வயதுடைய கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் அளுத்கம – மதுகம வீதியின் வெலிபன்ன பகுதியில் மோட்டார் வாகனங்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தை ஒன்று உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
மினுவங்கொட, குடாகொட பகுதியில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குருநாகல் – நீர்கொழும்பு வீதியின் வீரபுகெதர பகுதியில் ஓட்டோ ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கால்வாய் ஒன்றில் வீழ்ந்ததில் மடவல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் – தம்புள்ளை வீதியில் முத்ததெட்டுகல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் இருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று சறுக்கி விழுந்ததில் குறித்த நபர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.