ஜனாதிபதித் தேர்தல் – ‘நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா?’- மஹிந்த அணியிடம் ஐ.தே.க. கேள்வி
” எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுப்பதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது. ” – என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று (09) பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது.
சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுதாக்கல், 27-2 இன்கீழான கேள்வி உட்பட தினப்பணிகள் முடிவடைந்தப்பின்னர், மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் தினேஸ் குணவர்தன எம்.பி. கருத்து வெளியிட்டார்.
அவ்வேளையில், தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சுகின்றதா என வாசுதேவ நாணயக்கார எம்.பி., சபை முதல்வரிடம் வினா தொடுத்தார்.
இதற்கு பதிலளித்த சபைமுதல்வர்,
” மாகாணசபைத் தேர்தல் மட்டுமல்ல ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.
மாகாணசபைத் தேர்தலை பழைமுறைப்படி ( விகிதாசாரமுறைப்படி) நடத்துவது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இணக்கமும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பழையமுறைப்படி தேர்தலை நடத்துவதற்கு அரசு தயார்.” என்றார்.