ஜனாதிபதியை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறார் நாமல் குமார் – மிக முக்கிய தகவல்களை வழங்கவேண்டியுள்ளதாகவும் அறிவிப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து , ‘  கொலை சூழ்ச்சி’ குறித்து மிக முக்கிய தகவல்கள் வெளிப்படுத்த வேண்டியுள்ளது  என்று ஊழல் எதிர்ப்பு படையணியின் தலைவரான நாமல் குமார தெரிவித்தார்.

ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிதருமாறுகோரி ஜனாதிபதி செயலகத்திடம் இன்று (01) நாமல் குமார கடிதமொன்றை கையளித்தார். அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

” பிரபுக்கள் கொலை சூழ்ச்சி தொடர்பில் வெளிப்படையாக குறிப்பிட முடியாத சில தகவல்களும் இருக்கின்றன. ஜனாதிபதியை நேரில் சந்தித்து அவற்றை வெளிப்படுத்த முயற்சிக்கின்றேன்.

ஜனாதிபதியை சந்தித்த பின்னர் நான் உயிரிழந்தாலும் பரவாயில்லை. சம்பந்தப்பட்ட தரப்புக்கு தகவலை வழங்கிய திருப்தியாவது ஏற்படும். எனவே, சந்திப்புக்குரிய நேரத்தை ஒதுக்கிதருமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” என்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தை கொலை செய்வதற்கு சூழ்ச்சி வகுக்கப்பட்டது என்றும்,

இதன் பின்னணியில் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான முன்னாள் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தொடர்புபட்டுள்ளார் என்றும் நாமல் குமார திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தினார்.

இதையடுத்து இவ்விவகாரம் தெற்கு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏன்! ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்த பிரதான காரணிகளுள் இதுவும் ஒன்றாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஜனாதிபதியை கொலை செய்ய சூழ்ச்சி வகுக்கப்படவில்லை என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மிக முக்கிய தகவல்களை ஜனாதிபதியிடம் தெரிவிக்க வேண்டியுள்ளது என்று நாமல்குமார அறிவிப்பு விடுத்துள்ளார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *