மஹிந்தவுக்கு எதிராக சு.க. உபதலைவர் போர்க்கொடி! – எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துமிந்தவுக்கு வழங்குமாறும் பரிந்துரை
பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துமிந்த திஸாநாயக்கவுக்கு வழங்குமாறு சுதந்திரக்கட்சியின் உபதலைவரான பியசேன கமகே தெரிவித்துள்ளார்.
” நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது சுதந்திரக்கட்சி உறுப்பினர் ஒருவருக்கே வழங்கப்படவேண்டும்.
இதன்படி கட்சியின் மூத்த உறுப்பினரான நிமல்சிறிபாலடி சில்வா அப்பதவிக்கு பொருத்தமானவர். அவ்வாறு இல்லாவிட்டால் துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்படவேண்டும்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்த உறுப்பினர்களுக்கு அப்பதவியை வழங்கக்கூடாது. அதை பெறுவதற்கு அவர்கள் ஏற்புடையவர்களும் அல்லர்.
மஹிந்த எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டால் அது சட்டவிரோதமாக அமையும். இது தொடர்பில் சபாநாயகரிடமும் எடுத்துரைப்பேன்.” என்றும் பியசேன கமகே கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எதிர்வரும் 8 ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.