தீ விபத்தால் நிர்க்கதியான போடைஸ் தோட்ட மக்கள் கூடாரங்களில் அடைப்பு!
டிக்கோயா, போடைஸ் தோட்டத்தில் 30 ஏக்கர் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தற்காலிகமாக கூடாரங்கள் அமைக்கும் பணிகள் இன்று ( 30) ஆரம்பமாகின.
போடைஸ் தோட்ட பொது மைதானத்திலேயே இராணுவத்தினர், விமானப்படையினர், பொலிஸார், தோட்ட அதிகாரிகள் ஆகியோரின் உதவியுடன் கூடாரங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.
குறித்த கூடாரங்களை அமைப்பதற்கு தோட்ட நிர்வாகமும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாகவும் 5 இலட்சம் ரூபா பெறுமதியில் தகரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக தற்காலிக மலசலகூடங்களும் வழங்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் 19 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
க.கிசாந்தன்