தொழிலாளர்கள் திண்டாட்டம்! ரூ.1000 கைகூடுமா? 19 ஆம் திகதி தீர்வு கிட்டுமா?
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் முக்கியத்துவமிக்க சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதன்போது சம்பளப் பிரச்சினைக்கு இறுதி தீர்வு காணப்படலாம் என தொழிற்சங்க தரப்பிலிருந்து நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்சம்பளமாக ஆயிரம்ரூபா வழங்குமாறு வலியுறுத்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கடந்த ஏழு நாட்களாக தொடர்வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் அழைப்பு விடுக்கப்பட்ட இப்போராட்டத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியும் ஆதரவு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இ.தொ.கா பிரதிநிதிகள் நேற்று இரவு சந்தித்து பேச்சு நடத்தினர். ” தொழிலாளர்களின் சம்பளர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டியது அவசியம். 19 ஆம் திகதி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு நடத்தப்படும். அதன்பின்னர் தீர்வு வழங்கப்படும்” என்று இதன்போது ஜனாதிபதி உறுதியளித்தார்.
இதையடுத்து போராட்டத்தைக் கைவிடுமாறு தொழிலாளர்களிடம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கோரியது. போராட்டமும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, 1000 ரூபா சம்பளத்தை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இழுத்தடிப்பு செய்துவருகின்றது. எனவே, 19 ஆம் திகதி ஆயிரம் ரூபா கைகூடுமா என்ற கேள்வி எழுகின்றது.