ஐ.தே.க. அரசியல் இணைந்தால் அமைச்சுப் பதவி இல்லை ! சு.க. எம்.பிக்களுக்கு மைத்திரி கடிவாளம்!!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவளிக்க தயாராகிவந்தவேளை, கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு தடைவிதித்துள்ளார்.
” புதிய அரசுக்கு ஆதரவளித்தாலும் சு.க. உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கமாட்டேன்.” என்று அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சுதந்திரக்கட்சி எம்.பிக்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இரவு நடைபெற்றது. இதன்போது மேற்கண்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சு.கவின் 21 எம்.பிக்களும் எதிரணியில் இருந்து, சுயாதீன அணியாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
“ சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சி வரிசையிலேயே இருக்கும், ஐதேகவுடன் தேசிய அரசாங்கத்தை அமைக்கமாட்டோம். தனித்தனி முடிவுகளை எடுக்காமல், 21 எம்.பிக்களையும் எதிர்க்கட்சியில் ஒரே குழுவாக இயங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். இதன்படி செயற்படுவோம்.” என்று தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.
மைத்திரியின் இந்த அறிவிப்பால் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளித்த பௌசி, பியசேன கமகே, மனுச நாணயக்கார ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதில் சிக்கல் உருவாகியுள்ளது.